Publish Date: Sun, 19 Jul 2020 (11:57 IST)
Updated Date: Sun, 19 Jul 2020 (11:59 IST)
கொரோனாவை விட மின் கட்டணத்தை கண்டு மக்கள் அச்சப்படுகிறார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன் வெளியான வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம் என்றாலும், சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை என்று குற்றச்சாட்டு கூறிய தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின், கொரோனாவை விட மக்கள் மின் கட்டணத்தை கண்டு அச்சப்படுகிறார்கள் என்றும், வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல என்றும், கேரளா, ம.பி. மகாராஷ்டிரா மாநிலங்களில் மின்சார கட்டணத்தில் சலுகை அறிவிப்பு செய்துள்ள நிலையில் மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? அல்லது மனமில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் மக்களுக்கு மாதம் ரூ.5000 தர வேண்டும் என நான் வலியுறுத்தி வரும் நிலையில் மக்களிடம் இருந்து பணத்தை பெறுவதிலேயே தமிழக அரசு குறியாக உள்ளது என்றும் திமுக தலைவர் கூறியுள்ளார்.