Publish Date: Sat, 18 Jul 2020 (15:03 IST)
Updated Date: Sat, 18 Jul 2020 (15:35 IST)
திமுக மீதும் ஸ்டாலின் அவர்கள் மீதும் தவறான பிரச்சாரங்களை ஒரு கூட்டம் தவறாக செய்து வருகிறது என ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, முருகனை பழித்து பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது. திமுக தலைவரும் இதையே கூறியிருக்கிறார். இந்து, கிருத்துவ, முஸ்லிம் மக்கள் மு.க.ஸ்டாலின் பின்பு இருப்பதை மத்திய அரசின் உளவு துறை வாயிலாக அறிந்து கொண்டவர்கள் திட்டமிட்டே இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
அண்ணா கூறியது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை கோட்பாட்டோடு இயங்கக்கூடியகட்சி திமுக. திமுக தலைவர் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு கருப்பர் கூட்டதின் சட்ட பூர்வ போராட்டத்துக்கு திமுக ஆதரவு தரும் என போலியான தகவலை பதிவிட்டு உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அதுமட்டுமின்றி சைபர் கிரைமிலும் புகார் அளித்துள்ளோம். ஆனால் அதன்பேரில் நடவடிக்கை இல்லை.
நாளை முழு அடைப்பு என்பதால் நாளை மறுதினம் திமுக சார்பில் வழக்கறிஞரோடு ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளோம். குள்ளநரி கூட்டம் தமிழகத்தில் நுழைய உள்ளது. தமிழகத்தில் 100 க்கு 100 க்கு காவிக் கூட்டத்தை விரட்டியடித்தவர்கள். எனவே குறுக்குவழியில் நுழைய திமுக கூட்டணிக்கட்சிகள் அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.