Publish Date: Sat, 31 Mar 2018 (13:39 IST)
Updated Date: Sat, 31 Mar 2018 (13:44 IST)
ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக செயலாளர் வைகோவின் கண் எதிரிலேயே ஒரு தொண்டர் தீக்குளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நடைப்பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, மதுரை பழங்காநத்தத்தில் அவர் இன்று நடைபயணத்தை துவங்கினார்.
அந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக சிவகாசியை சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்தார். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேமுதிக தொண்டர்கள் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, பேச்சை நிறுத்தி விட்டு கீழே வந்த வைகோ, அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்குமாறு போலீசாருக்கு கோரிக்கை வைத்தார். அதன் பின் மேடையில் பேசிய அவர் கண்ணீர் வடித்தார். தீக்குளிக்கக் கூடாது என பலமுறை நான் கூறியும் சிலர் இப்படி செய்து விடுகின்றனர். இயற்கை அந்த தம்பியை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க கூறிவிட்டு, அவர் தனது நடைப்பயணத்தை தொடர்ந்தார்.