Publish Date: Thu, 03 Mar 2022 (14:43 IST)
Updated Date: Thu, 03 Mar 2022 (14:45 IST)
வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் 130 வருடத்திற்கு பிறகு இப்படி நடப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து, குளிர்காலம் நடந்து வருகிறது. சில நாட்களில் அதுவும் முடிந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் பல உருவாவதால் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும். சில சமயங்கள் காற்றழுத்த தாழ்வு நிலை காலம் தவறி குளிர்காலத்தின் ஆரம்பத்திலும் நிகழ்வதுண்டு.
ஆனால் இம்முறை குளிர்கால முடிய உள்ள மார்ச் மாதத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 130 ஆண்டு கால வானிலை ஆய்வு வரலாற்றில் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகம் நோக்கி வருவது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளது.
1938ல் இலங்கையையும், 1994ல் அந்தமானையும் மார்ச் மாதத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் நெருங்கின என்பது குறிப்பிடத்தக்கது.