Publish Date: Wed, 28 Jan 2026 (12:04 IST)
Updated Date: Wed, 28 Jan 2026 (12:06 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் சென்னை மாமல்லபுரத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது அதிமுக, திமுக இரண்டையும் கடுமையாக விமர்சித்தார்.
திமுக தீயசக்தி என்றால் அதிமுக ஊழல் படிந்த அடிமை கட்சி என்று பேசினார். இதையடுத்து அதிமுகவினரும் விஜய் கடுமையாக விமர்சிக்க துவங்கிவிட்டனர்.
குறிப்பாக தனது படங்கள் வெளியாகும் போது அதை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று அதில் சம்பாதிக்கும் விஜய் மிகப்பெரிய ஊழல்வாதி என்று அதிமுக ஐடி விங் சார்பில் சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் இணைந்துள்ள டிடிவி தினகரன் விஜய் அதிகமாக பேசுகிறார்.. நாங்கள் பொங்கி எழுந்தால் அவர் தாங்க மாட்டார்.. தன் படத்தில் டிக்கெட் விலையில் நடக்கும் ஊழலையே அவர் கண்டு கொள்வதில்லை.. அவர்தான் ஊழலை ஒழிக்கப்போகிறரா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதே கருத்தை பல அதிமுக மற்றும் திமுக அமைச்சர்களும் சொல்லியிருந்தார்கள்.
இந்நிலையில், சினிமா விழாவில் ஒன்றில் விஜய்க்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பேசியபோது ஒரு செய்தியாளர் விஜய் நடிக்கும் படங்களின் டிக்கெட் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள்.. அதை விஜய் கேட்பதில்லை.. அவருக்கு ஆதரவாக நீங்கள் பேசி என்ன ஆகப்போகிறது?.. அவர் பேசுவதில்லை.. என்று கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன மன்சூர் அலிகான் 2000 ரூபாய்க்கு அவர் சினிமா காட்டுவதாக நீங்கள் கோபப்படுகிறீர்கள்.. அவங்களுக்கு அந்த பவர் இருக்கு. விக்குறான்.. வாங்குறவன் வாங்குறான். உங்களுக்கு என்ன?.. ஓட்டுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம், 5 ஆயிரம் வரை கொடுக்கிறாங்களே. அது யாருடைய பணம்?.. அது மக்களின் பணம்தானே?.. அவனவன் அப்பன் வீட்டு காசையா எடுத்து கொடுக்குறான்?.. என்று கேள்வி கேட்டு அந்த செய்தியாளரின் வாயை அடைத்தார்.