மதுரை மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரங்களில் வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பகல் நேர ரயில்கள் என்பதால், முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் அதிகமாக பயணம் செய்கின்றனர். இதனால், முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் மற்ற பயணிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.
விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் இந்த குழப்பம் அதிகமாக காணப்படுவதால், பயணிகளின் நன்மைக்காக இந்த ரெயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் காரைக்குடி - சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டி பொதுப் பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் மே 11 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் பின், இந்த ரயில்களில் 3 குளிரூட்டப்பட்ட இருக்கை பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.