ஜாக்டோ-ஜியோ சார்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பிப்ரவரி 25ஆம் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம், சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என ஏற்கனவே நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறுவது சட்டவிரோதம் என்றும், ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருச்செந்தூர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஜாக்டோ-ஜியோ சட்டப்படி உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று போராட்டம் நடத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில், சட்டவிரோத செயல்கள் அல்லது அசம்பாவிதம் நடந்தால், நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறிய நீதிபதிகள், மக்களின் அடிப்படை உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran