கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயரச் சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை ஆகியவற்றிலும் வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமான செயல்பாடுகள் குறித்து ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி செந்தில்குமார், விஜய்யை நேரடியாக குறிப்பிட்டுக் கடுமையாக சாடினார்.
"இந்த விவகாரத்தில் தலைமைப் பண்பே இல்லை என்று நீதிபதி செந்தில்குமார் மிக காட்டமான விமர்சனத்தைப் பதிவு செய்தார். சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு மற்றும் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை உத்தரவு பிறப்ப்பித்தார்.
மேலும் இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு கரூர் காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணையிட்டது.
ஆதவ் அர்ஜுனா சமூக ஊடகமான X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவை அரசு தரப்பு சுட்டிக்காட்டியது. அதை பரிசீலித்த நீதிபதி, வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.