Publish Date: Wed, 10 Jan 2018 (16:48 IST)
Updated Date: Wed, 10 Jan 2018 (16:51 IST)
ஆர்கே நகர் தோல்வி குறித்து அதிமுக அவைத்தலைவரும், அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவருமான மதுசூதனன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளடி வேலைகள் பார்த்ததாகவும், தோல்விக்கு காரணமான ஜெயக்குமாரை அமைச்சரவையில் இருந்து தூக்க வேண்டும் எனவும் மதுசூதனன் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஜெயலலிதா இருந்திருந்தால் பதவியை பறித்து கட்சி ரீதியான நடவடிக்கை எடுத்திருப்பார். தோல்விக்கு காரணமான ஜெயகுமாரை அமைச்சரவையில் இருந்து தூக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இலக்கா மாற்றமாவது செய்ய வேண்டும் என ஆவேசமாக உள்ளார் மதுசூதனன்.
அப்படி செய்யாத பட்சத்தில் அவைத்தலைவராக உள்ள தான் தன்னிச்சையாக ஒரு சில முடிவுகளை கட்சியில் எடுக்க உள்ளதாக மிரட்டலும் விடுத்துள்ளார். ஓபிஎஸ் இது தொடர்பாக மதுசூதனனிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் அமைதியாகவில்லை என தகவல்கள் வருகிறது. இதனால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என தெரியாமல் இருக்கின்றனர் எடப்பாடி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.