காதலித்து திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபருக்கு எலி மருந்து கலந்து கொலை செய்ய முயற்சி செய்த காதலி குறித்த சம்பவம் விழுப்புரம் அருகே நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் என்ற பகுதியில் ஒரு வாலிபர் இ-சேவை மையம் நடத்தி வந்தார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இன்ஜினியரிங் கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தனர்.
அந்த நிலையில், திடீரென வாலிபரின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, குடும்பத்தினர் விருப்பத்திற்கு இணங்க, அந்த வாலிபர் தனது காதலியிடம், "இனிமேல் உன்னிடம் பழக மாட்டேன், திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று கூறிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, நைசாக பேசி, தன்னுடைய வீட்டிற்கு காதலனை வரவழைத்து டீ கொடுத்தார். டீ குடித்ததும் வாலிபர் மயங்கி விழுந்தார். அப்போது தான், அந்த டீயில் எலி மருந்து கலந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, வாலிபரின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காதலி அவரது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.