Publish Date: Wed, 01 Jan 2020 (09:16 IST)
Updated Date: Wed, 01 Jan 2020 (09:18 IST)
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை அதாவது ஜனவரி இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளன
இந்த நிலையில் நகர்ப்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த சென்னை நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் ஊரக உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தல் முடிவை வெளியிட தடையில்லை என்பது உறுதியானது
இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் இதுகுறித்து மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் ஊரக உள்ளாட்சிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் நாளை திட்டமிட்டபடி வாக்குகள் எண்ணப்படும் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்து முடிவு வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன