வங்கி வாடிக்கையாளரின் பணம் ஆன்லைன் மோசடியில் திருடப்பட்ட சம்பவத்தில் அலட்சியம் காட்டிய வங்குக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த மதுமிதா என்பவருக்கு கடந்த 2023ம் ஆண்டு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள் தங்களை மும்பை க்ரைம் போலீஸார் என கூறிக்கொண்டு, மதுமிதா அனுப்பிய பார்சலில் போதைப் பொருட்கள் இருந்ததாக கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரிக்க ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை தர வேண்டும் என கேட்டுள்ளனர்.
அவ்வாறாக பேசிக் கொண்டே அவர் கொடுத்த தகவல்களை வைத்து வங்கியில் அவசர லோனில் அப்ளை செய்து 15 லட்சத்தை பெற்றும், மதுமிதாவின் வங்கியில் இருந்த 4 லட்சத்தையும் எடுத்து மொத்தம் 19 லட்சத்தை சுருட்டியுள்ளனர். இதுகுறித்து மதுமிதா வங்கியில் புகார் அளித்தபோது அவர்கள் அலட்சியம் காட்டியதுடன், மதுமிதாவே அந்த லோன் பணத்தை கட்ட வேண்டும் என கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன், ஏமாற்றியவர்களின் வங்கி கணக்கு தெரிந்தபோதும் கூட வங்கி இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் 15 லட்சம் லோன் பணத்திற்கு தன்னிடம் எவ்வித உறுதியும் கூட செய்யாமல் பணத்தை வரவு வைத்தனர் என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளரிடம் உறுதி செய்யாமலே 15 லட்சத்தை வரவு வைத்ததால் அந்த கடன் பணத்தை வாடிக்கையாளர் செலுத்த தேவையில்லை என்றும், அந்த கடனை வங்கி ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளரின் பணம் திருடப்பட்ட கணக்கு விவரம் தெரிந்தபோதும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக மதுமிதாவின் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும், சேவை குறைபாடு, மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சமும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரமும் வங்கி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K