Publish Date: Fri, 03 May 2019 (18:49 IST)
Updated Date: Fri, 03 May 2019 (18:50 IST)
வங்கக்கடலில் உருவான ஒடிஷா புயல் இன்று காலை கரையை கடந்த நிலையில் இந்த புயலால் அம்மாநிலம் பலத்த சேதம் அடைந்துள்ளது. நாளை முதல் தான் மீட்புப்பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது
இந்த நிலையில் ஒடிஷாவின் தலைநகர் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டிடப்பணிகளுக்காக பிரமாண்ட உயரமுள்ள கிரேன் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த கிரேன் இன்று ஃபானி புயல் காரணமாக வீசிய பயங்கர சூரைக்காற்றில் அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது. வீடுகளின் மீது அந்த கிரேன் விழுந்தபோது ஒருசில வீடுகள் இரண்டாக பிளந்த காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
அதேபோல் ஒடிஷாவின் கட்டாக் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்டிருந்த பிஎஸ்என்எல் டவர் சாலையின் குறுக்கே விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது மேலும் ஒடிஷா மாநிலத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாலையில் சரிந்து விழுந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.