Publish Date: Fri, 01 Dec 2017 (12:36 IST)
Updated Date: Fri, 01 Dec 2017 (12:38 IST)
பெங்களூரை சேர்ந்த அம்ருதா தான் ஜெ.வின் மகள் என களம் இறங்கியுள்ள வேளையில், ஜெ.வின் உறவினர் லலிதா என்பவர் அதுபற்றி பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.
பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், ஜெ.வின் மகளாக தன்னை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிடுமாறு வலியுறுத்தி, அவரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்நிலையில்தான், பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகள் லலிதா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனது தாயின் அண்ணன் மகள்தான் ஜெயலலிதா. அதாவது எனக்கு தாய் மாமா மகள். ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருந்தது எங்களுக்கு தெரியும். அதன் விளைவாக அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் உண்மை. எங்கள் பெரியம்மா ஜெயலட்சுமிதா அவருக்கு பிரசவம் பார்த்தார். இதுபற்றி வெளியே கூறக்கூடாது என ஜெயலலிதா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். 1970ம் ஆண்டுக்கு பின் ஜெ. எங்கள் குடும்பத்தினரிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
அதேபோல், ஜெ.வின் சகோதரி முறையான சைலஜா-சாரதி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். அதுதான் அம்ருதா. ஜெ.வின் மகள் நான்தான் என தற்போது அம்ருதா கூறியிருக்கிறார். அம்ருதா கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது. டி.என்.ஏ சோதனை பார்த்தால் உண்மை தெரியவரும். சொத்துக்கு ஆசைப்பட்டு அம்ருதா இந்த விவகாரத்தை வெளியே கூறவில்லை. ஜெயலலிதாவே தன் தாய் என அம்ருதா நினைக்கிறார். ஆனால், எங்களிடம் எந்த ஆதரமும் இல்லை
ஜெயலலிதாவும், சோமன்பாபுவும் சென்னை மயிலாப்பூரில் ஒரு வீட்டில் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். அதில்தான், அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனவே, சோபன்பாபுவே அம்ருதாவின் தந்தையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. டி.என்.ஏ சோதனை நடத்தினால் உண்மை தெரிய வரும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மற்றொரு பேட்டியில் “ஜெ.விற்கு செய்து கொடுத்த சத்தியத்தை இத்தனை வருடங்களாய் நான் மீறவில்லை. தற்போது அம்ருதா என்ற பெண், தான் தான் ஜெ.வின் மகள் எனக் கூறுகிறார். எனவே, உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் சத்தியத்தை மீறுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 1970ம் ஆண்டு ஒரு உறவினர் திருமணத்திற்காக சென்னை சென்ற போது அங்கு ஜெயலலிதாவை கடைசியாக சந்தித்தேன். அதன் பின்பு அவரை சந்திக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
webdunia
Publish Date: Fri, 01 Dec 2017 (12:36 IST)
Updated Date: Fri, 01 Dec 2017 (12:38 IST)