Publish Date: Thu, 13 Jun 2024 (13:45 IST)
Updated Date: Thu, 13 Jun 2024 (13:47 IST)
குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேருக்கு மேல் பலியாகியுள்ள நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் பலியாகி உள்ளார். இவர் விசா முடிந்து மறுநாள் இந்தியா திரும்ப இருந்த நிலையில் முந்தைய நாள் இரவில் தீவிபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பலியான கருப்பண்ணன் ராமு என்பவரின் மகன் கூறிய போது என்னுடைய தந்தை 25 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவருடைய விசா 11ஆம் தேதியுடன் முடிவடைந்து 12ஆம் தேதி அவர் ஊருக்கு திரும்ப வேண்டும்.
சம்பள கணக்கு வழக்கு விவரங்களை முடித்துவிட்டு மறுநாள் அவர் புறப்பட தயாராக இருந்த நிலையில் தான் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ கட்டிடம் முழுவதும் பரவி பெரும் புகைமூட்டம் கிளம்பியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு எனது தந்தை உயிரிழந்தார்.
எனது தந்தையின் உடலை எப்படியாவது மீட்டு என்னிடம் கொடுத்து விடுங்கள், எனது தந்தைக்கு நான் முறைப்படி ஈமக்கிரியை செய்ய வேண்டும் என்று அவர் மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.