Publish Date: Sat, 19 Oct 2019 (14:20 IST)
Updated Date: Sat, 19 Oct 2019 (14:24 IST)
ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசி சீமான் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து பல அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ராஜீவ் காந்தி கொலையை வைத்து ஆரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, அரசியல் தளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும், அதிமுகவினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும் சீமான் மீது, தேச ஒறுமைபாட்டை சீர்குலைத்தல் மற்றும் வன்முறை தூண்டுதல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இது குறித்த தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு.
அதில், நாட்டின் பிரதமர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தி பேசும் சீமானுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை எனவும், கொலை செய்பவர்களும், கொலை குற்றவாளிகளும் தங்களுக்கு சாதகமாக எதையாவது காரணத்தை தேடுவது இயல்பு எனவும் கூறியுள்ளார்.
மேலும் 7 பேர் விடுதலைக்காக பிரதமரை கொலை செய்ததை பெருமையாக பேசுவதும், இதை சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதும் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து தமிழக காங்கிர்ஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ”விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றது” என கருத்து தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு” ராஜீவ் காந்தி கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.