Publish Date: Fri, 23 Mar 2018 (09:19 IST)
Updated Date: Fri, 23 Mar 2018 (09:22 IST)
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி கொழுக்குமலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ட்ரெக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் 36 பேர் சிக்கியதில் சம்பவ தினத்தன்றே 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் நேற்று வரை இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது
இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி என்பவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிகிச்சை பெற்று வரும் ஒருசிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா என்பவரை விசாரணை ஆணையராக நியமித்தார். அதன் அடிப்படையில் நேற்று தேனி வந்த மிஸ்ரா, இன்று வனத்துறை மற்றும் போலீசார் உதவியுடன் அப்பகுதியில் விசாரணையை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.