Publish Date: Tue, 16 Jan 2018 (15:51 IST)
Updated Date: Tue, 16 Jan 2018 (15:54 IST)
அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி பேட்டி ஒன்றில் தினகரன், சசிகலா, குறித்து அதிமுகவினருக்கு கவலை இல்லை எனவும் நடராஜனை எதனால் அடிப்பது என கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமியிடம் தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் தினகரன், சசிகலா, நடராஜன் குறித்து அதிமுகவினர் யாருக்கும் கவலை இல்லை என தெரிவித்தார்.
மேலும் நடராஜன் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை தான் தான் தயார் செய்து கொடுத்தது போல நடராஜன் பேசியுள்ளார் அதனை எச்சரிக்கிறேன், எதிர்வினை கடுமையாக இருக்கும் என்றார்.
மேலும் கிருஷ்ணப்பிரியா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி, கிருஷ்ணபிரியாவின் கன்னத்தில் அறைவேன் என்று நடராஜன் கூறுகிறார். ஆனால் ஒன்றரை கோடி தொண்டர்களின் மனது புண்படும்படி ஜெயலலிதாவை கொச்சைப்படுத்திய நடராஜனை எதனால் அடிப்பது என்று தெரியவில்லை. அவர் ஒரு கிரிமினல் என்று எம்.ஜி.ஆரால் வெளியேற்றப்பட்டவர் என ஆவேசமாக கூறினார்.