Publish Date: Thu, 26 Jul 2018 (07:56 IST)
Updated Date: Thu, 26 Jul 2018 (08:01 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கூறப்பட்ட விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் என்பவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் மகளிர் விடுதி வைத்து நடத்தி வந்தவர் ஜெகந்நாதன். இந்த விடுதியில் வார்டனாக பணிபுரிந்த புனிதா என்பவரும் ஜெகந்நாதனும் சேர்ந்து அங்கு தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறிய புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் ஜெகந்நாதனும் புனிதாவும் தலைமறைவாகினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று ஆலங்குளம் என்ற பகுதியில் உள்ள கிணற்றில் ஜெகந்ந்தானின் பிணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெகந்நாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.