வடகிழக்கு பருவமழை பரவலாக தொடங்கியுள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையை ஒட்டிய பூதலூர் தாலுகா பகுதிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் வயல்களிலேயே சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.
இதனால், நெல்மணிகள் ஈரத்தால் முளைவிட்டு காணப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கில் செலவு செய்த விவசாயிகள், பயிர்களை முழுமையாக அறுவடை செய்ய முடியாமல், பெரும் நஷ்டத்தை எண்ணி துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விவசாயிகளின் இந்த துயரத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் ஆய்வு மேற்கொண்டார். காட்டூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று, மழையில் முளைவிட்ட நெல்மணிகளைப் பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நேரில் குறைகளைக் கேட்டறிந்தார்.