மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2025-26 கல்வியாண்டுக்கான சேர்க்கை வரும் 21ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 1200க்கும் அதிகமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் மட்டும் மூன்று வயது குழந்தைகளை சேர்க்கும் வசதி உள்ள நிலையில், மற்ற பள்ளிகளில் குழந்தைகள் ஆறு வயது பூர்த்தி ஆனவுடன் தான் சேர்க்கப்படுவர்.
இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு ஏற்கனவே நேற்று முன் தினம் முதல் தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பங்களை மார்ச் 21ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://balvatika.kvs.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து ஆவணங்களையும் அப்லோடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வான மாணவர்களின் முதல் பட்டியல் மார்ச் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல் ஏப்ரல் 2ஆம் தேதியும் மூன்றாவது பட்டியல் ஏப்ரல் 7ஆம் தேதியும் வெளியிடப்படும் என கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தெரிவித்துள்ளது.