Publish Date: Thu, 11 Oct 2018 (09:18 IST)
Updated Date: Thu, 11 Oct 2018 (09:19 IST)
வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் சின்மயி விவகாரம் குறித்து ஒருசில தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் நேஷனல் ஊடகங்கள் இந்த விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர்.
அதேபோல் ஒருசில திரையுலகினர்களை தவிர வைரமுத்து விவகாரம் குறித்து மற்ற நடிகர், நடிகையர் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர். இருப்பினும் இந்த விஷயத்தில் சின்மயிக்கு ஆதரவாக சமந்தா, வரலட்சுமி, சித்தார்த், ஜிப்ரான் உள்பட பலர் நேரடியாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் சின்மயி குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து விளக்கம் அளிக்கும் வரை இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்த நடிகை கஸ்தூரி, நேற்று அவர் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்த நிலையில் இந்த விளக்கத்திற்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியதாவது: உண்மையை காலம் சொல்லுமா? ஏன் ? நீங்களே சொல்லலாமே ? சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது என்று கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.