Publish Date: Thu, 02 May 2019 (16:09 IST)
Updated Date: Thu, 02 May 2019 (16:13 IST)
சம்பாதிப்பதற்காக என்ன வேணுமென்றாலும் செய்பவர் தான் செந்தில் பாலாஜி. ஏற்கனவே அமைச்சராக இருக்கும் போது 7 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி தலா ரூ 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை வாங்கியவர்தான் இவர் என்று அரவக்குறிச்சி அருகே அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கார்விழி, அஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குகள் சேகரித்தார். இரவிலும் நடைபெற்ற வாக்குசேகரிப்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதன் பெண்மணிகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். மேலும், ஊரெங்கிலும் ஆங்காங்கே ஆரத்தி தட்டுகளுடனும், பட்டாசுகளுடன் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியபோது, அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதன் நல்ல வேட்பாளர் ஆவார், ஏற்கனவே 2011 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தவர். ஆனால் தற்போது எதிர்த்து நிற்கும் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை எல்லோரும் அறிவர். அடிக்கடி செல்போன் எண்ணை மாற்றுபவர். செல்போனையே எடுக்காதவர் ஆவர். மேலும், பொய் சொல்வதுதான் தி.மு.க கட்சி என்றும், ஏற்கனவே நிலம் கொடுக்கின்றேன் என்று கூறி ஏமாற்றியதையும் மக்கள் ஞாபகப்படுத்தினார்.
மேலும், செந்தில் பாலாஜி அம்மாவின் அரசில் வாழ்ந்துவிட்டு அம்மாவின் அரசிற்கு துரோகம் செய்யும் விதமாக நடந்து கொண்டு வருவதோடு, எதிரிகளிடம் போயுள்ளார். மேலும், அவர் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார் என்று கூறிய அவர், அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது 7 ஆயிரம் நபர்களிடம் தலா ரூ 2 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை லஞ்சம் வாங்கியவர் ஆவார் என்றதோடு, எங்கள் ஈரோடு மாவட்டத்தில் கூட 65 நபர்களிடம் பணம் வாங்கி, இன்றுவரை வேலையும் வாங்கித்தர வில்லை, பணமும் தரவில்லை, அதற்காக விசாரணை நடைபெற்றுவருவதையும் சுட்டிக்காட்டினார்.