Publish Date: Wed, 16 Feb 2022 (16:27 IST)
Updated Date: Wed, 16 Feb 2022 (16:28 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ந்து ஆதரித்து பேசியவர்களில் கராத்தே தியாகராஜனும் ஒருவர்.
காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்த கராத்தே தியாகராஜன் கட்சி தலைமையினரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அவரின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட கராத்தே தியாகராஜன் ரஜினி கட்சியில் இணைவார் என சொல்லப்பட்டது.
ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ரஜினி தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் பேசிய ஒரு கருத்து சர்ச்சையைக் கிளப்பும் விதமாக உள்ளது.
அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக ஆட்சியைப் பிடித்திருப்பார். அவரை பிரசாந்த் கிஷோரை வைத்து சரிகட்டி விட்டார்கள் என்று திமுகவை மறைமுகமாக குற்றம் சாட்டும் விதமாகப் பேசியுள்ளார். அவரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.