Publish Date: Mon, 16 Dec 2019 (11:41 IST)
Updated Date: Mon, 16 Dec 2019 (11:47 IST)
தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. மேலும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீஸாருடன் கைகலப்பு ஏற்பட்டதில் வன்முறை வெடித்தது. இதில் இரவில் பல்கலைகழகத்தில் புகுந்து மாணவர்கள் தாக்கினர்.
மேலும் இதனை கண்டித்து அலிகார் பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதில் போலீஸாருடன் கைகலப்பு ஏற்பட்ட்டு வன்முறை வெடித்தது.
இதனை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்துவந்த நிலையில் தற்போது கட்சி சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.