Publish Date: Sun, 21 Feb 2021 (12:11 IST)
Updated Date: Sun, 21 Feb 2021 (12:13 IST)
இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் மட்டுமே உள்ள நிலையில் ஜூன் மாதத்திற்கு பிறகு முன்பதிவில்லாத இருக்கைகள் அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் முழுவதுமாக அனைத்து ரயில் சேவைகளும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு முழுவதும் ரயில் சேவைகளை தொடர அனுமதித்த நிலையிலும் குறிப்பிட்ட ரயில் சேவைகள் மட்டுமே தொடர்ந்து வருகிறது.
இந்த ரயில்களிலும் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முன்பதிவு இல்லாமல் பயணிப்பது முடியாத காரியமாக உள்ளது. இதனால் அவசர கால பயணம் மேற்கொள்ள முடியாமல் பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்ட முன்பதிவில்லாத பெட்டிகளுக்கான முன்பதிவை ஜூன் மாதத்திற்கு பிறகு ஐஆர்சிடிசி நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கு பிறகு வழக்கம்போல முன்பதிவில்லாத பெட்டிகள் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.