Publish Date: Fri, 22 Sep 2017 (19:05 IST)
Updated Date: Fri, 22 Sep 2017 (19:07 IST)
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.
அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, விதிமுறை மீறுகிறவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என தமிழக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, நீதிமன்றமும் அதை உறுதி செய்தது.
ஆனால், வாடகை வாகனத்தை ஓட்டுபவர்கள் தங்கள் அசல் உரிமத்தை தங்கள் முதலாளிகளிடம் கொடுத்து வைத்திருப்பது வழக்கம். அதேபோல் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்து விட்டால், புதிய உரிமம் பெறுவதில் தாமதம் ஆக வாய்ப்பிருப்பதால் இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
அதில், இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி “ அசல் ஓட்டுனர் உரிமத்தை மறந்து விட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டுமே போதுமானது. ஏனெனில், மறதியை குற்றமாக கருத முடியாது. ஆனால், அசல் ஓட்டுனர் உரிமமே இல்லாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை கட்டாயம். நகல் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எப்படி வெளிநாடு செல்ல முடியதோ, அது போலத்தான் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டக் கூடாது.
இதனால் ஏற்படும் இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என நீதிபதி தீர்ப்பளித்தார்.