Publish Date: Thu, 01 Mar 2018 (10:49 IST)
Updated Date: Thu, 01 Mar 2018 (10:54 IST)
உடல் நலக்குறைவால் மரணமடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர்(82) கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
அந்நிலையில் நேற்று காலை ஜெயேந்திரருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
அதனையடுத்து, பவுர்ணமி நாளான இன்று, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, வேதமந்திரங்கள் ஓதப்பட்டு, அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மடத்தின் வாயில்கள் அனைத்தும் சாத்தப்பட்டு, வெளியே எல்.இ.டி திரையில் நல்லடக்க பணிகள் ஒளிபரப்பப்பட்டது. அதை ஏராளமான பக்தர்கள் பார்த்தனர். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.