முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே தனது 'ரோல் மாடல்' என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் ஓமலூருக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். அப்போது அவர் பேசியதாவது:
சேலத்தில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' நிகழ்ச்சியை தொடங்குவதற்காக வந்துள்ளேன். இந்த நிகழ்ச்சி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடத்தப்படும். விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறியதால், சில தனியார் நிறுவனங்கள் எனக்கு 'அரசியலில் ஆளுமை' விருதை வழங்கின. அந்த விழாவில், தமிழகத்தின் பெண் ஆளுமைகளாக ஜெயலலிதாவையும், என்னையும் குறிப்பிட்டனர். அந்த புகைப்படத்தைத்தான் எங்கள் பொருளாளர் சுதீஷ் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
எம்.ஜி.ஆர் எனது மானசீக குரு எச் சிலர் கூறிவந்தாலும், இப்போது விஜயகாந்த் தான் தங்கள் மானசீக குரு என சொல்பவர்களுக்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம்.
ஜெயலலிதா ஒரு சிறந்த பெண் ஆளுமை. அவரே எனது ரோல் மாடல். ஒரு பெண்ணாக, முதலமைச்சராக இருந்து கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தியவர். ஜெயலலிதா தமிழகத்தின் ஆளுமை. அவர்தான் என்னுடைய ரோல் மாடல் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.