Publish Date: Thu, 07 Sep 2017 (12:40 IST)
Updated Date: Thu, 07 Sep 2017 (13:13 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த வந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ, திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இன்று தாவியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தன்னையும், சசிகலாவையும் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணி இறங்கியுள்ளதால், அதிருப்தியடைந்த தினகரன் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் கடிதம் கொடுத்தனர்.
மேலும், அந்த 19 எம்.எல்.ஏக்களும் பாண்டிச்சேரி சின்னவீராம் பட்டினத்தில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆகி விட்டது என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தினகரன் அணியில் இருந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன், திடீரென இன்று எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இன்று காலை சபாநாயகரை சந்தித்து பேசியுள்ளார். அதோடு, விரைவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து அதை உறுதி செய்வார் எனத் தெரிகிறது. அதேபோல், ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொடுத்த கடிதத்தையும் அவர் திரும்ப பெற இருக்கிறார் எனக்கூறப்படுகிறது.
தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆளுநரை சந்திக்க தினகரன் சென்றுள்ள நிலையில், அவரது அணியில் இருக்கும் ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவியிருப்பது திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.