Publish Date: Thu, 07 Mar 2019 (10:20 IST)
Updated Date: Thu, 07 Mar 2019 (10:25 IST)
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி மாற்றப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் காவல்துறையில் முக்கிய பதவியில் இருந்த ஜாபர் சேட், அதிமுக ஆட்சி மாறியவுடன் மண்டபம் முகாமுக்கு மாற்றப்பட்டார். அதன்பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மீண்டும் பணியில் சேர்ந்த ஜாபர் சேட்டுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் டிஜிபி மற்றும் திட்ட அலுவலராகப் பொறுப்பேற்றார். தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிபிசிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்திற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். அவற்றின் விவரம்
1. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் டிஜிபி மற்றும் திட்ட அலுவலராக இருந்த ஜாபர்சேட் சிபிசிஐடி டிஜிபியாக இடமாற்றம்.
2. சிபிசிஐடி ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
3. சென்னை போலீஸ் போக்குவரத்துக்கழக சிறப்பு அதிகாரியாகப் இருந்த சு.அருணாச்சலம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம்.
4. உத்தரப் பிரதேசத்திலிருந்து அயல் பணியில் தமிழகம் வந்துள்ள எஜிலியர்சேன் சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
5. உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாகப் பதவி வகிக்கும் சோனல் சந்திரா பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
6. தமிழ்நாடு கமாண்டோ படை ஏ.எஸ்.பி. வருண் குமார் எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
7. தேனி மாவட்ட காவல் தலைமையிடக் கூடுதல் எஸ்.பி. பழனிகுமார் எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.