Publish Date: Wed, 03 Apr 2019 (15:52 IST)
Updated Date: Wed, 03 Apr 2019 (15:54 IST)
திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவரது வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டிலும் சமீபத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பலகோடி ரூபாய் ரொக்கமும், பல ஆவணங்களும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த சோதனை காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சோதனையின் விபரம் குறித்து வருமான வரித்துறையினர்களின் அறிக்கை கிடைத்தபின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை சற்றுமுன்னர் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையில் இருக்கும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அதன்பின்னரே வேலூரில் தேர்தல் நடத்தலாமா? அல்லது நிறுத்தப்படுமா? என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கும். இந்த முடிவு என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது