Publish Date: Tue, 02 Jul 2019 (12:28 IST)
Updated Date: Tue, 02 Jul 2019 (12:29 IST)
தங்க தமிழ்ச்செல்வனை அடுத்து அமமுக வின் இன்னொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா கட்சியை விட்டு விலக இருக்கிறார்.
அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். தனது ஆதரவாளர்களுடன் ராஜாவாக இருந்த தினகரன் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, திமுக ஆகியவற்றைத் தோற்கடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளால் அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுகவுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.
டிடிவி தினகரன் மேல் எழுந்த அதிருப்தியால் அவரது வலது மற்றும் இடது கரங்களாக திகழ்ந்த செந்தில் பாலாஜி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளது அமுமுகவின் பெறும் சரிவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கீழ்மட்டத்தில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிலரும் கட்சியில் இருந்து விலகி மற்றக் கட்சிகளில் சேர்ந்து வருவதால் சசிகலா வருவதற்குள் கட்சியே காலியாகி விடுமோ என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
தங்க தமிழ்ச்செல்வன் கடந்த வாரம் திமுக வில் இணைந்ததை அடுத்து இப்போது தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய இசக்கி சுப்பையாவும் இப்போது அமமுக வில் இருந்து விலகி அதிமுக வில் இணைய இருக்கிறார். இந்நிலையில் அவர் ஜூலை 6 ஆம் தேதி அதிமுக அதிகாரப்பூர்வமாக இணையப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் இவருக்கு சொந்தமான இடத்தில்தான் அமமுக தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.