Publish Date: Mon, 01 Jul 2019 (18:29 IST)
Updated Date: Mon, 01 Jul 2019 (18:30 IST)
திமுகவை மெதுவாக பார்த்து கொள்ளலாம், முதலில் அழிக்க வேண்டிய கட்சி அமமுக என அதிமுகவை விட மிக தீவிரமாக இருக்கின்றதாம் பாஜக. மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம் கமல் கட்சி மற்றும் தினகரனின் அமமுக பிரித்த ஓட்டுக்கள்தான். கமல் கட்சி தானாக கரைந்துபோய்விடும் என்பதால் அந்த கட்சியை ஒன்றும் செய்ய தேவையில்லை என்றும், அமமுகவை காலி செய்ய வேண்டியதுதான் முதல் பணி என்றும் பாஜக முடிவு செய்துள்ளதாம்
இதனையடுத்து செந்தில்பாலாஜி, தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை தவிர மீதியிருக்கும் பதவி இழந்த 16 முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு குறி வைக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில் தினகரன் அணியின் வட மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் 'ஆளும்கட்சி வந்தால் உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என தூண்டில் போட்டுள்ளாராம். அதேபோல் பதவி இழந்த மற்றொரு எம்.எல்.ஏ-வின் மைத்துனரிடம் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அனேகமாக இன்னும் ஒருசில அமமுக விக்கெட்டுக்கள் விழும் என தெரிகிறது
தினகரனின் அமமுகவில் தினகரனை அடுத்து சக்தி வாய்ந்த நபர்களாக ஐவர் அணி ஒன்று உள்ளதாம். அந்த அணியை காலி செய்துவிட்டால் அமமுக காலி என்று கூறப்படுவதால் அந்த ஐவர் அணிக்கு அடுத்ததாக பாஜக குறி வைத்துள்ளதாகவும் விரைவில் தினகரனுக்கு மிகப்பெரிய ஷாக் காத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதெல்லாம் சசிகலா வெளியே வரும் வரை தான் என்றும், அவர் விடுதலை ஆகிவிட்டால் அதிமுக தனது முழு கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் தினகரன் இன்னும் அதீத தைரியத்தில் உள்ளதாக கூறப்படுகிறது