Publish Date: Mon, 11 Feb 2019 (13:34 IST)
Updated Date: Mon, 11 Feb 2019 (13:35 IST)
பாஜகவோடுக் கூட்டணி அமைப்பதற்கு இடைத்தேர்தலை இப்போது நடத்தக்கூடாது என அதிமுக சார்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இப்போது 21 தொகுதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக உள்ளன. இது, கிட்டத்தட்ட மொத்த தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 10 சதவீதத் ஆகும். இதில் தகுதி நீக்கம் செய்யப்பட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் கிட்டத்தட்ட 15 மாதக் காலம் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலோடு இந்த 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது இடைத்தேர்தல் தள்ளிப்போகும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம் இப்போது இடைதேர்தல் நடந்து அதில் குறைந்தது 8 தொகுதிகளில் அதிமுக வெல்லாவிட்டால் அது சட்டபேரவையில் பெரும்பாண்மையை இழந்து ஆட்சியை இழக்க வேண்டிய சூழல் உருவாகும்.
இப்போதிருக்கும் சூழ்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் வெல்வது என்பது குதிரைக் கொம்புதான் என்பதை அதிமுக அரசும் உணர்ந்தே உள்ளதாகத் தெரிகிறது. அதனால் முடிந்தவரை அதிமுக அரசு இடைத்தேர்தலைத் தள்ளிப்போடப் பார்ப்பதாகத் தெரிகிறது. இதற்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து இடைத்தேர்தலை தள்ளி வைத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக தமிழகத்தில் காலூன்றத் துடித்துக்கொண்டிருக்கும் பாஜகவைத் தனது கூட்டணியில் இணைத்துக் கொள்ள சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் மற்றும் தமிழகக் காங்கிரஸ் கட்சியின் புதியத் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ். அழகிரி ஆகியோர் அதிமுக மற்றும் பாஜக மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். கே.எஸ்.அழகிரி ‘இதுவரை 16 நாடாளுமன்றத் தேர்தல்களை சிறப்பாக நடத்தியுள்ள தேர்தல் ஆணையம் சமீபகாலமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. தனது தனித்தன்மையை இழந்து மோடி அரசின் கண்பார்வைக்கு ஏற்ப செயல்படும் அமைப்பாகி வருகிறது. இதன் மூலம் மோடி அரசு 21 சட்டமனறத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை வேண்டுமென்றே ஒத்திப்போட்டு வருகிறது’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.