Publish Date: Mon, 05 Oct 2020 (09:28 IST)
Updated Date: Mon, 05 Oct 2020 (09:31 IST)
ரயில் உணவகத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்து பயணி ஒருவர் திட்டி வெளியிட்ட வீடியோ ட்ரெண்டான நிலையில், இதுகுறித்து ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாகவே ரயில்களில் உள்ள கேண்டீனில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாக உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பல்லவம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ரயில்வே கேண்டீனில் அவர் பொங்கல் வாங்கி உள்ளார் 200 கிராம் இருக்க வேண்டிய பொங்கல் 50 கிராம் மட்டுமே இருந்துள்ளது. மேலும் இந்த பொங்கள் 8 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திட்டி வீடியோ வெளிட்டுள்ளார் அந்த பயணி.
அந்த வீடியோ வைரலாகி உள்ள நிலையில் பொங்கல் சமாச்சாரம் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. ஐஆர்சிடிசி அனுமதி பெற்ற ரயில் கேண்டீன்களில் பதப்படுத்தப்பட்ட பாதுகாப்பான உணவுகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. பயணி வாங்கிய பொங்கல் பதப்படுத்தப்பட்டது. 50 கிராம் இருக்கும் பொங்கலில் வெந்நீர் ஊற்றினால் 5 நிமிடங்களில் அது 200 கிராம் பொங்கலாக மாறிவிடும். இதுகுறித்த செய்முறைகளும் பொங்கல் டப்பாவிலேயே அளிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் பயணிக்கும் ரயிலில் சுடுதண்ணீருக்கு பயணிகள் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.