Publish Date: Wed, 22 Mar 2017 (11:00 IST)
Updated Date: Wed, 22 Mar 2017 (17:32 IST)
விரைவில் நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெறும் வாக்குகள் குறித்து தமிழக உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்துள்ள அறிக்கை அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஜெ.வின் மறைவையடித்து, அவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தொகுதியில் தீபா, ஓபி.எஸ் அணி, திமுக, தினகரன் என பரபரப்பான போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தினகரன் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனின் வெற்றி வாய்ப்பு குறித்து தமிழக உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் தினகரன் வெறும் 30 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே பெறுவார். அதே நேரத்தில் டெபாசிட் வாங்குவார் என கூறியுள்ளனர்.
ஜெ.மரணத்தில் அப்பகுதி மக்கள் ஏற்கனவே சசிகலா மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். அந்த கோபம் தற்போது தினகரன் மீது திரும்பியுள்ளது. அந்த தொகுதியில் அதிமுகவிற்கு 40 சதவீத வாக்குகள் இருந்தது. ஜெயலலிதா போட்டியிட்டு அவரின் செல்வாக்கு மற்றும் பணபலம் மூலம் அது 55 சதவீதமாக உயர்ந்தது. இதில் தினகரனுக்கு வெறும் 10 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனராம்.
இந்த அறிக்கை தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து தீவிர ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளாராம்.