Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி- அன்புமணி ராமதாஸ்

Advertiesment
anbhumani
, சனி, 27 மே 2023 (15:55 IST)
மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி: அனைவருக்கும் மீண்டும் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மதுரை சூர்யா நகரில் 38 பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைகளின் பட்டாவை மதுரை ஆட்சியராக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனீஷ் சேகர் அவரது கடைசி பணி நாளில் ரத்து செய்திருக்கிறார். இது உள்நோக்கம் கொண்ட பத்திரிகையாளர்களை பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

மதுரையில் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்ற பத்திரிகையாளர்களுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ அங்கிருந்து 50 கிமீ செலவில் வேறு சொத்துகள் இருக்கக்கூடாது என்ற விதியை காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.  இதை ஏற்க முடியாது. பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கப்படவில்லை. அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை செலுத்தி தான் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. அதிலும் கூட 4 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டு மனை ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது பட்டாவை ரத்து செய்வது நியாயமல்ல.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை ஒதுக்குவதில் இந்த விதி பின்பற்றப்படவில்லை. மதுரையில் இன்னொரு பகுதியில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை ஒதுக்குவதிலும் இந்த விதி பின்பற்றப்படவில்லை. சென்னையில் இ.ஆ.ப., இ.கா.ப அதிகாரிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டதிலும் இந்த விதி பின்பற்றப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது ஒரு தரப்பு பத்திரிகையாளர்களுக்கு மட்டும்  பொருந்தாத விதியை காரணம் காட்டி வீட்டு மனை ஒதுக்கீட்டை ரத்து செய்வது சரியல்ல.

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் வாழ்நிலை என்பது அனைவரும் அறிந்தது தான்.  அவர்களுக்கு வீடுகள் வழங்குவதும், வீட்டு மனை வழங்குவதும் அரசின் கொள்கை முடிவு.  அதில் மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைக் காட்டக்கூடாது.  இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் தலையிட்டு ரத்து செய்யப்பட்ட வீட்டு மனை ஒதுக்கீட்டை பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்