கர்நாடகத்தில் உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிலர், அங்கு வாழும் தமிழர்களை துன்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய சீமான், ‘’நாங்கள் எதைச்செய்தாலும் தமிழக இனவெறியர்கள். பாசிசத்தை தூண்டுபவர்கள், தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசி பழி சுமத்தினீர்கள்.
காவிரியில் தண்ணீர் கேட்கும்போது எங்கள் பேருந்துகளை பிடித்து வைத்துக்கொள்வது, எங்கள் படங்கள் ஓடிய திரையரங்குகளை அடித்து நொறுக்குவது, எங்கள் மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டி அச்சுறுத்தலை கொடுப்பது, அடிப்பது, தண்ணீர் எதுக்கு சிறுநீர் தருகிறோம் என்று எழுதி அனுப்புவது என்று கொடுமைகள் நடக்கின்றன.
எவ்வளவு நேரம் ஆகிவிடும் நாங்கள் இங்குள்ள கன்னடர்களை விரட்டுவதற்கு. அதைச்செய்யாமல் இருக்கிறோம். போராடுகிற மக்களை கர்நாடக அரசு ஆதரித்து ஊக்கப்படுத்துகிறது.
நான் கோயம்பேட்டில் கர்நாடக பேருந்தை தடுத்து நிறுத்தினால் நாளைக்கு இந்த அரசு என் மேல் குண்டாசை போட்டு உள்ளே தூக்கிப்போடும். ஆனால் என் பிள்ளைகளை அடிக்கிறான்; பேருந்துகளை உடைக்கிறான். அந்த அரசு யாரையாவது கைது செய்திருக்கிறதா?
தொடர்ச்சியாக இதை சகித்துக்கொண்டே இருப்போம் என்று எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய தவறு. எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாமல் ஒரு நியாயமான முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும்.
அங்கே உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும். அது நடக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.