Publish Date: Mon, 01 Jan 2018 (13:26 IST)
Updated Date: Mon, 01 Jan 2018 (13:33 IST)
ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று இயக்குநர் கௌதமன் சவால் விடுத்துள்ளார்.
அரசியலுக்கு வருவதை உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறினார். பல்வேறு அரசியல் நிகழ்வுகளால் ஓராண்டாக தமிழ்நாட்டுக்கும், தமிழ்மக்களும் பெரும் அவமானம் நிகழ்ந்திருக்கிறது. மக்கள் பெரிதும் துயரப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலில் இறங்குகிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் வருகையை பலர் போற்றியும், சிலர் தூற்றியும் வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய இயக்குநர் கௌதமன், ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழ்நாட்டுக்கு நினைத்துப் பார்க்க முடியாத சீர்கேடு என்று சாடினார். அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்ற நினைக்கும் ரஜினி தமிழகத்தில் நடைபெற்ற ஈனத் தமிழர்களின் படுகொலை, ஜல்லிக்கட்டு, காவேரி மேளாண்மை வாரியம் அமைப்பது, ஆந்திர வனப்பகுதியில் தமிழர்களை சுட்டுக் கொன்றது, நீட் தேர்வால் மரணமடைந்த மாணவி அனிதாவின் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனை, மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற பல பிரச்சனைகளுக்கு குரல்கொடுக்காதது ஏன் என்று வினவினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது ஒரு வெட்கக்கேடான விஷயம் என்றும், தமிழக மக்கள் இதனை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் கூறினார். மேலும் ரஜினி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார்.