பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி அமைத்த பிறகு சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி ஓபிஎஸ் அனுமதி கேட்டும் அவரை சந்திக்காதது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். மேலும் நேற்று அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் “ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடும் முன்பே அவரிடம் போனில் பேசினேன். எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்று சொன்னேன். இருந்தபோதும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். ஏதும் சொந்த பிரச்சினையால் இந்த முடிவை எடுத்தாரா என தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தத்தால் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான கருத்து. என்னிடம் சொல்லி இருந்தால் அவர் பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு செய்திருப்பேன். முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர் எதற்காக சந்தித்தார் என தெரியவில்லை. தொகுதி பிரச்சினையாக கூட இருக்கலாம்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K