Publish Date: Thu, 18 Jan 2018 (10:14 IST)
Updated Date: Thu, 18 Jan 2018 (10:26 IST)
ஈரோட்டில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(56). இவரது மனைவி ராஜாமணி (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது. கணவன் - மனைவி திருமண விழாவில் சமையல் வேலை பார்த்து வந்தனர். தனிமையில் வாடிய தம்பதியினர் விரக்தியில் நேற்று இரவு 8 மணியளவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த ஈரோடு ரெயில்வே போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்தி முதல் கட்ட விசாரணையில் மாதேஸ்வரன் காசநோயால் அவதிப்பட்டு, நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். மேலும் கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முடியாமலும் கஷ்டப்பட்டார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கமும் அந்த தம்பதியை வாட்டி வந்தது. இதனால் தம்பதியினர் தற்கொலை செய்ய முடிவு செய்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.