Publish Date: Tue, 24 May 2016 (13:22 IST)
Updated Date: Tue, 24 May 2016 (13:31 IST)
தமிழகத்தில் கடந்த 15.03.2016 முதல் 13.04.2016 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை 25.05.2016 அன்று காலை 09.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்க தடை ஏற்படக் கூடாது என்பதற்காக தற்காலிக சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரங்களை அறிந்த மாணவ - மாணவிகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 01.06.2016 முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற http://www.dge.tn.nic.in/ இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.