Publish Date: Thu, 08 Mar 2018 (08:00 IST)
Updated Date: Thu, 08 Mar 2018 (08:04 IST)
எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நேற்று சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் 15 பேர்களின் பூணூல்களை மர்ம நபர்கள் அறுத்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், திராவிட இயக்கத்தை சேர்ந்த நான்கு பேர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூணூல் அறுப்பில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினரை கண்டித்து ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக்கடலில் இறங்கி புரோகிதர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதுமட்டுமின்றி புரோகிதர்கள் வேலைநிறுத்தமும் செய்ததால் ராமேஸ்வரத்திற்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும் திராவிடர் கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமேஸ்வரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புரோகிதர்கள் போராட்டம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் திராவிட கட்சியினர் பாஜகவை எதிர்த்து போராடி வரும் நிலையில் புரோகிதர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.