Publish Date: Sat, 17 Feb 2018 (12:45 IST)
Updated Date: Sat, 17 Feb 2018 (12:48 IST)
எண்ணெய் நிறுவனங்களுக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்குமான ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து புதிய டெண்டர், மாநில அளவில் மட்டுமே நடத்தப்படும் என்றும், அந்தந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகள் மட்டுமே அந்தந்த மாநில டெண்டரில் பங்கேற்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 12ஆம் தேதியில் இருந்து தொடர் வேலைநிறுத்தத்தை அறிவித்தது. இந்த வேலைநிறுத்தம் 6வது நாளாக இன்றும் தொடர்ந்த நிலையில் இருதரப்பினர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எண்ணெய் நிறுவனங்ளின் சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டதால், தற்போது டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று மாலை முதல் வழக்கம்போல் எல்பிஜி லாரிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தால் கடந்த ஆறு நாட்களில் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.