Publish Date: Mon, 30 Oct 2017 (18:37 IST)
Updated Date: Mon, 30 Oct 2017 (18:54 IST)
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே நேற்று நிலவிக்கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்குச் சூழற்சி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்றார்.
சென்னையில் காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. மாலை நேரமே இருண்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நவம்பர் 3ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையை மக்கள் ரசித்தாலும் வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கடந்த முறை ஏற்பட்ட வெள்ளம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.