கள் ஒரு உணவு பொருள் என வலியுறுத்தி நடக்க இருக்கும் போராட்டத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கள் இறக்குதல் ஒரு தொழிலாக இருந்து வந்த நிலையில், கள்ளு கடைகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக பெரியார் காலம் முதலாக நடத்தப்பட்ட போராட்டங்களால் கள்ளு கடைகளுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் தேசிய அமைப்புகள் பனை சார் பொருளாதாரத்தையும், கள்ளையும் ஆதரிக்கின்றன. கள் மது அல்ல அது ஒரு உணவு என அவர்கள் வாதிடுகின்றனர். இந்நிலையில் 15ம் தேதி கள் உணவு என்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “கள் மதுதானே தவிர உணவு அல்ல. கள்ளின் ஆபத்தை உணராதவர்கள் அரசியல் ரீதியாக தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். கள் உடலுக்கு நல்லது என தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்
கள் இறக்க அனுமதித்தால் கிராமம் தோறும் நாட்டுச்சாராயம் காய்ச்சுதல் அதிகரிக்கும். இந்த போக்கு எங்கே எப்படி போய் முடியும்? கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவதும், பொது வெளியில் கள் குடிப்பதும் சட்டவிரோதம். இந்த போராட்டத்திற்கு அரசு தடை விதிக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K