தமிழகத்தில் இன்றும் நாளையும் அதாவது ஏப்ரல் 14, 15 ஆகிய இரண்டு நாட்களில் சில இடங்களில் வெப்ப அலை தாக்கம் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பின் இரு நாட்களிலும் மாநிலத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சாதாரணத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஏப்ரல் 14-ம் தேதி வெப்பநிலை 103 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, திருத்தணியில் 101.48 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 101.3 டிகிரி, ஈரோட்டில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
மற்றொரு பக்கம், ஆந்திராவின் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஏப்ரல் 14 முதல் 19 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று காலை வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.
முக்கியமாக, வேலூர், திருப்புவனம், மேலூர், முள்ளங்கினாவிளை, கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் தலா 30 மில்லிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சட்டி, பெரியபட்டி, தானியமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 20 மில்லிமீட்டர் வரை மழை பெய்துள்ளது.