ஆளுநர் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் எடப்பாடி?
Publish Date: Thu, 16 Nov 2017 (10:30 IST)
Updated Date: Thu, 16 Nov 2017 (10:41 IST)
கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்வேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன் தினம் கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆளுநர் விதிகளை மீறி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளார் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆளுநர் கோவையில் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள், குற்ற வழக்குகளில் இன்னும் மீட்கப்பட வேண்டிய பொருட்கள், தலைமறைவு குற்றவாளிகளின் எண்ணிக்கை, பிடிவாரன்ட் நிலுவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆளுநர் விசாரித்தார் என்றும், ரேஷன் அரிசிக் கடத்தலில் பிடிபட்டுள்ள குற்றவாளிகள் எத்தனை பேர், குண்டர் சட்டத்தில் கைதான நபர்கள் எத்தனை பேர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி எவ்வளவு போன்ற தகவல்களைப் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு முதல்வர் இருக்கும்போது அவரது துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்திருக்கிறார் ஆளுநர். ஆளுநரின் இந்த வரம்பு மீறிய செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒருபக்கம் அதில் தவறு இல்லை ஏதும் இல்லை என பாஜக நிர்வாகிகளும், அதிமுக அமைச்சர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும், ஆளுநரின் இந்த நடவடிக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை மட்டுமல்ல, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்வேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார். அவர் ஒரு முறை செய்த ஆய்வே இவ்வளவு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் போது, மேலும், ஆய்வை தொடர்வேன் எனக் கூறியிருப்பது எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Murugan
Publish Date: Thu, 16 Nov 2017 (10:30 IST)
Updated Date: Thu, 16 Nov 2017 (10:41 IST)
அடுத்த கட்டுரையில்