Publish Date: Sun, 28 Jul 2024 (13:32 IST)
Updated Date: Sun, 28 Jul 2024 (13:33 IST)
நாளை பொறியியல் படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ளதை அடுத்து மாணவர்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
2024-25 கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் 3 சுற்றுக்களாக கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், சிறந்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27ஆம் தேதி வரை நடந்தது. இதனை அடுத்து பொது பிரிவினைக்கான கலந்தாய்வு நாளை முதல் அதாவது ஜூலை 29 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கலந்தாய்வின் போது மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்து உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் மூன்றாம் தேதி வரை நடைபெறும் என்றும் மூன்று சுற்றுக்களாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொழில் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.